ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் பேசிய அவர், திமுக ஆட்சியில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை மக்கள் சாப்பிட முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்டார். மக்கள் உண்ணக்கூடிய தரமான அரிசியைக் கொண்டுவர வேண்டும் என தனது தலைவர் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும், அதிமுக மற்றும் தவெக இணைந்தால் ஒரு மிகப்பெரிய சக்தி உருவாகும் என்றும், முதலமைச்சர் விஜய்யின் விருப்பமும் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பதுதான் என்றும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். அதிமுக வேறு திசையில் செல்லும்போது முதலில் குரல் கொடுத்தவர் செங்கோட்டையன் என்றும், இபிஎஸ் உறவினர் ஒருவர் இன்று தவெகவில் இணைய வந்துள்ளதாகவும் அவர் கூறினார். 90% தொண்டர்கள் தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டதாகவும், த.வெ.கவில் இணையும் மாற்றுக் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மூலம் மாதம் 1500 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார். ஊழலுக்கு எதிரான மக்களின் கோபம்தான் கொளத்தூர் தொகுதியின் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். நமது முதலமைச்சர் கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.