சர்கார் திரைப்பட பேனர்களை கிழித்ததால் தான் அதிமுக ஆட்சியில் இல்லை என அமைச்சர் ஆனந்த் பேசியதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தரப்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 'விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததை அ.தி.மு.க. குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ள அமைச்சர் ஆனந்துக்கு கண்டனம். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்தான பதிலுரையில், அதைத் தவிர எல்லாவற்றையும் பேசினார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த். அவர் அவரது கட்சி குறித்தும், அவரது தலைவர் குறித்தும் பேசியது பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. பிளாக் டிக்கெட் வித்தது எல்லாம் ஒரு வரலாறா? என்றெல்லாம் கேள்வி கேட்கப் போவதும் இல்லை. ஆனால், தேவையே இல்லாமல் அஇஅதிமுக-வை சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதற்கான எதிர்வினையை நிச்சயம் அவர் எதிர்கொள்ள வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'சர்கார் திரைப்பட பேனர்களை கட்சித் தொண்டர்கள் கிழித்ததால் தான் அஇஅதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லையாம். அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்து இருப்பதால் இந்த அலங்கோலத்தை கேட்கும் நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. உலகில் வாழும் தமிழர்கள் உள்ளமெல்லாம் வீற்றிருக்கும் உன்னதத் தாய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி, தவறான வகையில் அரசியல் ரீதியாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பார்களா என்ன? அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் சரி, எங்கள் இதயதெய்வங்களை பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இந்த இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான். அவனது அரசியல் எதிர்வினை, எதிரிகளின் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடும்.' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்தின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'அதே சர்கார் படத்தில் நீங்கள் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த அம்மா லேப்டாப்களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள்? அன்று பழித்து பேசிய ஜெயலலிதாவின் பெயரை, அன்று படத்தில் தூக்கி எறிந்த அவரின் மக்கள் நலத்திட்டங்களை இன்று அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கேவலமாக இல்லையா?' என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழ்நாடு மக்களின் சாதாரண எண்ணப்படி தான் எங்கள் வெற்றி வாய்ப்பு நழுவியது. அப்போதும் 33.3% வாக்குகளோடு, 75 தொகுதிகளில் வென்று, மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றினோம். எனவே, பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே!' என அதிமுக தனது கண்டனப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக, 'சர்கார் பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப் படுகிறோம் – அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் இலவச விளம்பரம் கிடைத்ததற்காக' என்றும் அதிமுக தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட சர்கார் திரைப்படத்தின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்ததால் தான், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது என அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு அரசியல் புரிதலற்ற கருத்து என்றும், ஜெயலலிதாவின் பெயரைக் கொச்சைப்படுத்தியதால் தொண்டர்கள் அப்படி செயல்பட்டனர் என்றும் அதிமுக விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதை அதிமுக விமர்சித்துள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு மக்கள் மாற்றம் விரும்பியதால் தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என்றும், அப்போதும் 33.3% வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. அமைச்சரின் பழைய போக்கை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
