அதிமுகவின் தற்போதைய தலைமை மீது அக்கட்சியின் தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று அவர் ஆற்றிய உரையில், "நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுக சார்பில் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த காந்தி செல்வன். நீட் தேர்வுக்கு எதிரான இந்த தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை. இது மாணவர்களின் எதிர்கால பிரச்சனை என்பதால் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். இதில் அரசியல் பேச வேண்டாம்" என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், "ஜெயலலிதா இருந்த வரை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, ஜிஎஸ்டி, சிஏஏ போன்ற எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் உங்கள் நலனுக்காக டெல்லியில் சரணடைந்தீர்கள். எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கின்றனர்.
2017-க்குப் பிறகு செயல்படும் அதிமுக உண்மையான அதிமுக கிடையாது. அதனால் தான் எங்கள் முதலமைச்சர், நீத்துப்போன அதிமுக என்று குறிப்பிடுகிறார். தற்போது இருப்பது பாஜகவிடம் சரண் அடைந்த அதிமுக. உண்மையான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் தவெகவில் இணைந்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
