திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், த.வெ.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் இடையே இணக்கமான உறவு நிலவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியாததால்தான் நேரலை துண்டிக்கப்பட்டதாகக் கருதவதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், காவல்துறைக்கு ஆதரவாக ஆதவ் அர்ஜூனா நிழல் அமைச்சரைப் போல பேசி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த மாற்றத்தை இதுவரை செய்யவில்லை என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய மக்கள் நலத் திட்டங்களுக்காகவே 6 மாத கால அவகாசம் அளித்ததாகவும் சிவசங்கர் குறிப்பிட்டார். மக்கள் அன்றாடப் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அன்றாட சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் ட்விட்டரில் பதிலளிப்பதாகவும், ஆளுநர் உரை ஒரு சரித்திர நிகழ்வு என ஆளுநரே பதிவு செய்வதாகவும், அது ஒரு இணக்கமான நிகழ்வு என சபாநாயகர் தெரிவிப்பதாகவும் சிவசங்கர் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வுகள் த.வெ.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் இடையே ஒரு இணக்கமான உறவு நிலவி வருகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.