பல படங்களில் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகை வாசுகி, தற்போது வறுமையில் வாடுவதாகவும், மடிப்பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இவர் செயல்பட்டு வந்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகவும், இதனால் திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் போனதாகவும் வாசுகி கூறியுள்ளார். சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்ற இவர், அங்கு உணவுக்கே வழியில்லாத சூழல் ஏற்பட்டபோது, கையில் இருந்த நகைகளை விற்று வாழ்க்கையை ஓட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் சங்கம் ஓரளவு உதவி செய்துள்ளதாகவும், நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு, தன்னை அந்த சங்கத்தில் உறுப்பினராக்கி, அதற்கான கட்டணத்தையும் செலுத்தியதாகவும் வாசுகி தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி போன்ற நடிகர்களும் பணம் கொடுத்து உதவியதாகக் கூறியுள்ளார். ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அதிக பணம் செலவானதாகக் கூறியுள்ள வாசுகி, தனக்குத் தங்குவதற்கு இடமும், ஒரு வேலையும் கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால் உள்ளிட்டோர் தனக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
'என் கையில் பத்து ரூபாய் இருந்தால் தானே டீ கூட குடிக்க முடியும்? கழுத்தில் கிடந்த செயின், காலில் கிடந்த கொலுசு என அனைத்தையும் விற்று சாப்பிட்டுவிட்டேன். இப்போது விற்பதற்குக்கூட என்னிடம் எதுவும் இல்லை. எனக்குக் குழந்தையோ, கணவரோ எனப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை' என்று வாசுகி உருக்கமாகக் கூறியுள்ளார்.
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனவலிமை கூட இல்லை என்றும், எனவே தயவுசெய்து உங்கள் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்கிறேன். இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று அழுதுகொண்டே அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த மூத்த நடிகை, இன்று சாப்பாட்டுக்கே வழியின்றி நடுரோட்டில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

