மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கிச் சென்ற ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரபல நடிகை அந்தரா பானர்ஜி சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டு, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களை பிளேடால் தாக்கி அதிர்ச்சியூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான அந்தரா பானர்ஜி, மும்பையில் வசித்து வருகிறார். இவர் 'சாவ்தான் இந்தியா', 'கும்ரா', 'எண்ட் ஆஃப் இன்னசென்ஸ்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும், 'தி ஷாவுக்கீன்ஸ்', 'யே ஹை இந்தியா' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வரும் இவர், படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
சம்பவத்தன்று, நடிகை அந்தரா பானர்ஜி ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுடன் ஏசி பெட்டியில் ஏறி, அங்குள்ள ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். அந்த இருக்கைக்குரிய பயணி வந்தபோது, நடிகை அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பயணச் சீட்டுப் பரிசோதகர் (TTE) ஹரிகேஷ் திரிபாதி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் யாமினி காந்த் மிஸ்ரா மற்றும் காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் நடிகையிடம் பேசி, அவரை அவரது பெட்டிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இதனால் ஆத்திரமடைந்த நடிகை அந்தரா, பாதுகாப்புப் படை வீரர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். திடீரென தனது ஆடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, மறைத்து வைத்திருந்த ரேசர் பிளேடை எடுத்து பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி வீசியுள்ளார்.
இதில், உதவி ஆய்வாளர் யாமினி காந்த் மிஸ்ராவின் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், பாதுகாப்புப் படையினரின் சீருடை மற்றும் செல்போன்களையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாகவும் நடிகை மிரட்டல் விடுத்துள்ளார். நள்ளிரவில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், ஏசி பெட்டியின் கதவுகளைப் பூட்டி, நடிகை தப்பியோட முயன்ற கண்ணாடி கதவையும் அடைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பரபரப்புக்குப் பிறகு, ரயில் 'தஹானு' ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பெண் போலீசார் ரயிலுக்குள் அதிரடியாக நுழைந்து நடிகை அந்தரா பானர்ஜியைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

