சென்னை: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை 11-வது சிறு வழக்குகள் விசாரணை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர் வாங்கிய கடனை உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் விமலின் சொந்தத் தயாரிப்பில் வெளியான ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக, சினிமா பைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் சுமார் ரூ. 4.5 கோடி கடனாகப் பெற்றார். படம் வெளியாகி நீண்ட நாட்களாகியும், அவர் வாங்கிய கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடன் தொகையை ஈடுசெய்யும் வகையில், நடிகர் விமல் பைனான்சியர் கோபிக்கு காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால், அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, நடிகர் விமலின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால், வங்கி நிர்வாகம் காசோலைகளைத் திருப்பி அனுப்பியது. இது பைனான்சியர் கோபியை அதிர்ச்சியடையச் செய்தது.
இதனால், காசோலை மோசடி சட்டத்தின் கீழ் நடிகர் விமல் மீது சென்னை 11-வது சிறு வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் பைனான்சியர் கோபி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஏற்கனவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகர் விமலிடம் சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்த்தி, நடிகர் விமல் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் விமலுக்கு ஓராண்டு கால சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர் வாங்கிய கடனுக்கான முழுத் தொகையையும் உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
இதற்கிடையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நடிகர் விமல் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
