கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோவை ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இனி எம்.ஆர்.பி. விலையிலேயே மாதாந்திர அட்டைத்தாரர்களுக்கும் பால் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் 11 முதல் 25 ஆம் தேதிக்குள் ஆவின் செயலி (app) மூலம் பணம் செலுத்தி அட்டையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடி ரத்து நடவடிக்கைக்கு பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடியானது ஜூலை 1 முதல் நிறுத்தப்படும் என்ற ஆவின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சலுகையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் சுமையாக அமையும். மக்களின் அத்தியாவசியத் தேவையான பாலில் கூட சலுகையை பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பழைய நடைமுறையையே தொடர ஆவின் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பல குடும்பங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவின் நிர்வாகத்தின் இந்த முடிவு, பால் அட்டைதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஒருபுறம் இருக்க, இந்த தள்ளுபடி ரத்து மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.