முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டிய அமாவாசை திதி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று முக்கிய அமாவாசைகளில் வழிபாடு செய்வது அவசியம் என ஜோதிட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். பலருக்கும் திருமணத் தடை, காரியத் தடைகள், தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றமின்மை, குடும்பத்தில் அமைதியின்மை போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு பித்ரு தோஷமே காரணம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஒருவர் இந்த உலகிற்கு வரக் காரணமாக இருந்த பெற்றோருக்கும், அவர்களுக்கு முந்தைய முன்னோர்களுக்கும் அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆராதனை செய்து வழிபாடு செய்வது அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறும்போது ஏற்படும் மனக்குறை பித்ரு தோஷமாக நம்மைப் பிடிக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன், ராகு அல்லது கேதுவுடன் எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷத்தைக் குறிக்கும். எனவே, பித்ரு தோஷம் உள்ளவர்கள் பித்ரு வழிபாட்டை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
பித்ரு தோஷம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், தந்தையை இழந்த அனைவரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது அவசியமாகும். இந்த முறை, கடக ராசியில் உச்சம் பெற்ற குருவுடன் சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கின்றார்கள். இதனால் குருவின் அருளாசியும் கிடைக்கும். இந்த ஆடி அமாவாசை வழிபாட்டை செய்வதன் மூலம் பலன்கள் ஏராளமாக நமக்கு வந்து சேரும்.
மேலும், இந்த அற்புத நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், நற்செயல்கள், வழிபாடுகள் ஆகியவற்றின் பலன்கள் பல மடங்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பித்துருக்களின் ஆசீர்வாதத்தால் தீராத பிரச்சனைகளுக்குக் கூட தீர்வு கிடைக்கும். நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு, இந்தப் பிரச்சனை படிப்படியாக நீங்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, பொன், பொருள் சேரக்கூடியதாக இருக்கும். திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் விலகும்.
குலதெய்வ வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்ற நாள் இது. இது போன்ற அபூர்வமான அமாவாசை சேர்க்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திரும்ப வருகிறது. எனவே, இந்த அற்புத நாளில் முன்னோர்களுக்கான வழிபாடு செய்து அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம். இன்று ஆகஸ்ட் 12, ஆடி அமாவாசை அன்று அனைவரும் தவறவிடாமல் வழிபட்டுப் பயனடையுங்கள்.

