இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிந்த உடனேயே, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்து, மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அதை வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வினாத்தாள் கசிவு உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறைகேட்டின் முக்கிய சூத்திரதாரியாக வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் தாவரவியல் நிபுணராக இருந்த மனிஷா மந்தாரே செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், பிரகலாத் விட்டல் குல்கர்னி போன்ற பிற பேராசிரியர்களுடன் சேர்ந்து இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் மனிஷா மந்தாரேவை கைது செய்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி கோலெட் ரஷ்மி குஜூர், மனிஷா மந்தாரேவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். தேர்வுக்கு முன்பே, தங்கள் சதித்திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட மாணவர்களை ஏப்ரல் மாதம் புனேவில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து, மனிஷா மந்தாரே ஆலோசனைகளை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மனிஷா வாக்மரே மற்றும் பிரகலாத் விட்டல் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
