தமிழக அமைச்சரவையில் புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளை அமைச்சர் ராஜ்மோகன் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் குறித்து நடிகர் விஷால் எழுப்பிய கேள்விகள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு இந்தப் பொறுப்புகள் வழங்கப்பட்டது குறித்து நடிகர் விஷால், 'ராஜ்மோகனுக்கு என்ன முன் அனுபவம் இருக்கிறது? அவருக்கு இந்தப் பதவி எப்படி சரியாக இருக்கும்?' என்று கேள்வி எழுப்பினார். விஷாலின் இந்தக் கருத்து, திரைத்துறையினர் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும், 'நீங்கள் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது உங்களுக்கு என்ன முன் அனுபவம் இருந்தது?' என்றும், 'உங்களது கருத்து அருவருக்கத்தக்கது' என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் அருண் விஜய் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர், 'மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் வென்று அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். தயவுசெய்து தற்போதைய முடிவுகளில் தலையிடாதீர்கள். எந்தத் துறையைச் சார்ந்தவரோ, அதே துறையைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் அவர் நமது பிரச்சினைகளை நன்கு அறிவிப்பார் என்றும், நிச்சயமாக உதவுவார் என்றும் உறுதியாக நம்புகிறேன். தயவுசெய்து அவரது முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இப்போதே எந்தவொரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். அனைத்து நல்லபடியாகவே அமையும் என நம்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சிவா, அமைச்சர் ராஜ்மோகனின் நியமனத்தை வரவேற்றுள்ளார். அவர், 'அமைச்சர் ராஜ்மோகன் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்ல, அந்த துறையில் நல்ல அனுபவமும் கொண்டவர். அவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும், சினிமா துறையில் பலருடன் நல்ல நட்பும் நெருக்கமும் கொண்டவர். தமிழ் சினிமா துறையின் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராக இருப்பதால், அவரை தமிழ் திரைப்படத் துறை அமைச்சராக தேர்வு செய்திருப்பது மிகவும் சரியான முடிவாகும். இந்த சிறந்த தேர்வை செய்த முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள்' என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பவன் கல்யாண், முதல்வர் உடனான ஒப்பீடு குறித்து கருத்து தெரிவித்திருந்தாலும், தமிழகத்தின் சூழல் வேறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.