நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கூப்பர் கானோலி, தனது முதல் சீசனிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை 32 சிக்ஸர்களை விளாசியுள்ள கானோலி, 2008-ல் சனத் ஜெயசூர்யா அடித்த 31 சிக்ஸர்கள் என்ற 18 வருட பழமையான சாதனையை முறியடித்துள்ளார்.
22 வயதான கானோலி, பெர்த்தைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் ஆவார். ஐபிஎல் 2026 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ₹3 கோடிக்கு வாங்கியது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள கானோலி, 12 இன்னிங்ஸ்களில் 473 ரன்கள் குவித்துள்ளார். இதில் 32 சிக்ஸர்களும், 39 பவுண்டரிகளும் அடங்கும். இவர் ஐபிஎல் வரலாற்றிலேயே தனது முதல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக, 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சனத் ஜெயசூர்யா, 14 ஆட்டங்களில் 31 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்திருந்தார். இந்த 18 வருட சாதனையை கானோலி தற்போது முறியடித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கானோலி முதலிடத்திலும், ஜெயசூர்யா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில், ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் (28 சிக்ஸர்கள்) மற்றும் ஃபின் ஆலன் (27 சிக்ஸர்கள்) ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளனர். மே 17 அன்று தர்மசாலாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கானோலி 22 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அசத்தினார். ஆரம்ப விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், அணியை மீட்கும் பொறுப்பை ஏற்று இவர் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது.
ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளம் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் கானோலி பெற்றுள்ளார். இருப்பினும், ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஒட்டுமொத்த சாதனையை கிறிஸ் கெயில் (59 சிக்ஸர்கள், 2012) மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல் (52 சிக்ஸர்கள், 2019) ஆகியோர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.