சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவதை தடுக்கும் வகையில் ரஜினிகாந்த் செயல்படுவதாகவும், திமுக-அதிமுக கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, நிருபர்கள் விஜய் குறித்தும், திமுக-அதிமுக கூட்டணி முயற்சி குறித்தும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதற்கு நான் விடை கொடுக்காவிட்டால் அது உண்மையாகி விடும். இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தை இப்போது அளிக்கிறேன்" என்றார்.
"தேர்தல் முடிவு வந்தவுடன் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தேன். அது பெரும் விமர்சனம் ஆகிவிட்டது. மு.க. ஸ்டாலின் எனக்கு 40 ஆண்டு கால நண்பர். எங்களது நட்பு, கொள்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். இருந்தாலும் கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக ஒரு நண்பன் என்ற முறையில் நட்பு அடிப்படையில் அவரை சென்று சந்தித்தேன். உடனே விஜய் முதலமைச்சராக கூடாது. அதை தடுக்க தான் ரஜினி, மு.க. ஸ்டாலினை சந்தித்தார், வேறு இரண்டு பெரிய கட்சிகளை இணைக்கவும் திட்டமிடுகிறார் என்றெல்லாம் பரப்பி விட்டார்கள். இது போன்ற சூழ்நிலையில் இப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படி பேசும் அளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் கிடையாது. அதை தற்போது தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என்று விளக்கினார்.
மேலும், விமான நிலையத்தில் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "விஜய் முதலமைச்சரான உடனே எனது எக்ஸ்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். 2016-ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என்று நான் சொன்னது முதல் விமான நிலையத்திற்கு சென்றால் மீடியா இருக்கிறார்களா என்று கேட்டு வைத்துக் கொள்வேன். அப்படித்தான் இந்த முறையும் கேட்டு சென்றேன். ஆனால் மீடியா யாரும் வரவில்லை என்று சொன்னார்கள். அந்த சமயம் செல்போனில் வீடியோ எடுத்தபடி ஒருவர் என்னிடம் வந்து, ‘விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டாரே’ என்று கேட்கிறார். எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அவரைப் பார்த்தால் மீடியா மாதிரி தெரியவில்லை. நான் சிரித்தபடியே கடந்து விட்டேன். உடனே விஜய்க்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள். விஜய் மீது எனக்கு பொறாமை என்றும் பேசுகிறார்கள். நான் அரசியலில் இல்லை. அரசியலில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அரசியலில் நான் இல்லாதபோது விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேனோ தெரியவில்லை. அப்போது கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது. எனக்கும், விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன். என்னுடன் விஜய்யை ஒப்பிடுவது சரியாகாது. அதேபோல் அவருடன் என்னை ஒப்பிடுவதும் சரியாக இருக்காது. சிறிய வயதில் இருந்து அவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் முதலமைச்சராவதில் எனக்கு ஏன் பொறாமை. அரசியலில் சிறிய வயதில் அதாவது 52 வயதில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல சாதனை படைத்திருக்கிறார். மத்திய மாநில அரசுகளை தாண்டி தனி ஆளாக சினிமாவில் இருந்து வந்த ஒரு நபர் அரசியலில் ஜெயித்திருக்கிறார்.இதில் எனக்கு என்ன பொறாமை இருக்கப் போகிறது. இது சந்தோஷம் கலந்த ஆச்சரியம் தான். எனவே எனக்கு எந்த பொறாமையும் இல்லை. நிறைய எதிர்பார்ப்புகள் தான் இருக்கிறது அந்த எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்து மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாற்றம் தேவை என்று மக்கள் நினைத்து இருக்கிறார்கள். விஜய்யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன். இது வரை முதலமைச்சர் பதவியேற்பு விழாக்களில் நான் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவர் விருப்பப்பட்டு அழைத்ததின் பெயரில் தான் நான் அந்த விழாவுக்கு சென்றேனே தவிர அழைப்பிதழ் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.