புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் நாளை நண்பகல் 12 மணிக்கு பதவியேற்க உள்ளார். துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி தனது தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் லஜக தலா 1 என மொத்தம் 18 இடங்களை கைப்பற்றியது. திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களை வென்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி கடந்த மே 13-ம் தேதி பதவியேற்றார். அவருடன் நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
உப்பளம் தொகுதியில் 5-வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அன்பழகன் பதவிப்பிரமாணம் ஏற்கிறார். பின்னர், சட்டப்பேரவைக்கு வந்து தற்காலிக சபாநாயகராக அவர் பொறுப்பேற்கிறார்.
முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, அவர் 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன்படி, நாளை அவர் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மே 20-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பு வெளியாகும். அன்றைய தினம், அன்பழகன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி தவிர்த்து, மீதமுள்ள 28 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள். இருப்பினும், புதுச்சேரியில் இன்னும் 3 அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இழுபறி நீடிப்பதாகவும், புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.