நெதர்லாந்தில் இருந்து மீட்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகளை உடனடியாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். இது தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சொத்து என்றும், அதன் மத சகிப்புத்தன்மை செய்தியை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த வரலாற்று ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி என ஜோதிமணி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது என்றும், இதற்காக பிரதமருக்கு மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செப்பேடுகள் சோழப் பேரரசின் பல்வேறு மத நம்பிக்கைகளை மதிக்கும் தன்மையைச் சான்றாகக் காட்டுவதாகவும், இது தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து என்றும் ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும் இதை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்தப் போற்றுதலுக்குரிய வரலாற்று ஆவணங்கள் கூறும் மத சகிப்புத்தன்மை என்ற செய்தியை பிரதமர் மோடியும், பாஜகவும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜோதிமணி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த செப்பேடுகள் சோழர்களின் பெருமையையும், அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றுகின்றன.