தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, வேளாண் கூட்டுறவு கடன் வசூல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் மற்றும் கூட்டுறவுக் கடன்களை எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், விவசாயிகளின் நலனைக் காக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலம் தொடங்கப்படும் கடன் வசூல் நடவடிக்கைகளை, தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
வழக்கமாக, அரசாங்கம் கடன் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடும்போது, பயனாளிகளின் தகுதிகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் வரை கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதுண்டு. தற்போது, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வட்டியில்லா கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் உள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாதபட்சத்தில், 13 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது விவசாயிகளின் பொருளாதாரச் சுமையை அதிகரிக்கும் என்பதோடு, அடுத்த முறை சாகுபடி செய்வதற்கு கடன் பெற முடியாத நிலையும் உருவாகும்.
எனவே, பொருளாதார நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களையும், கூட்டுறவுக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கை. இந்த கோரிக்கையை ஏற்று, உடனடியாக வேளாண் கூட்டுறவு கடன் வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.