சென்னைவாசிகள் கவனத்திற்கு! நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் பரபரப்பான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகளின் வசதியையும், முக்கிய நிகழ்வுகளுக்கு எளிதான அணுகலையும் உறுதிசெய்யும் வகையில், CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து, "IPL 2026" லீக் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு பிரத்யேக மெட்ரோ பயணச் சலுகைகளை வழங்குகிறது.
நாளை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஐபிஎல் 2026 லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை முன்னிட்டு, ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், வழக்கத்தை விட கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது ரசிகர்களுக்கு மைதானத்திற்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல உதவும்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள், தங்களுடைய டிஜிட்டல் அல்லது பிசிகல் பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்வதன் மூலம் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம். இந்த சிறப்புச் சலுகையானது ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) செல்லுபடியாகும். இதன் மூலம், சென்னையில் உள்ள எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும், மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் வரை கட்டணமின்றி பயணிக்கலாம்.
மேலும், ரசிகர்களின் வசதிக்காக, கடைசி மெட்ரோ ரயிலின் புறப்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 01:00 மணிக்கு புறப்படும். பச்சை வழித்தடத்தில் (வழித்தடம் 2) பயணம் செய்யும் பயணிகள், சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். கடைசி ரயிலைப் பிடிக்க, பயணிகள் நள்ளிரவு 12:50 மணிக்குள் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்குள் வந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.