செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நேற்று நடைபெற்றது. புதிய கல்வியாண்டு தொடங்குவதையொட்டி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த சிறப்பு ஆய்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்ட வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அருகில் நடந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் பங்கேற்று வாகனங்களை ஆய்வு செய்தார். மொத்தம் 604 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையில், முதல் கட்டமாக 432 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில், 30 வாகனங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், 30 வாகனங்களில் கண்டறியப்பட்ட குறைகள் காரணமாக, அவற்றின் தகுதிச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டு, குறைகளை சரிசெய்து சான்றிதழை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் கோட்டாட்சியர் ரம்யா, இணை போக்குவரத்து ஆணையர் பொன் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் இயங்கும் 541 தனியார் பள்ளி வாகனங்களுக்கான கூட்டு ஆய்வு, கரசங்காலில் நடைபெற்றது. இதில், தாம்பரம் கோட்டாட்சியர் முரளி, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 440 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 35 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்றிதழ்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்குப் பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில் நடந்த ஆய்வில், சார் ஆட்சியர் ஆஷிக் அலி, துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பகுதியில் உள்ள 340 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், அவசரகால கதவுகள், முதலுதவிப் பெட்டிகள், தீயணைப்புக் கருவிகள், படிக்கட்டுகளின் உயரம், ஓட்டுநர்களின் தகுதிச் சான்றிதழ்கள் ஆகியவை தனித்தனியாகச் சரிபார்க்கப்பட்டன. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 21 வாகனங்களுக்கு இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து, தகுதிச் சான்று பெற்ற பின்னரே வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.