இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய ராணுவ தளபதியும், அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்டவருமான இசுதீன் அல் ஹதாத் காசாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹதாத்துடன் அவரது மனைவியும், 19 வயது மகளும் உயிரிழந்தனர். இவர்களது இறுதிச்சடங்கு மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா சுஹதா மசூதியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கும், பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதற்கும் இசுதீன் அல் ஹதாத் முக்கிய காரணமாக இருந்தார். ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கடந்த மே மாதம் கொல்லப்பட்ட பிறகு, காசாவிற்கான ஹமாஸின் ராணுவத் தலைவராக இவர் பொறுப்பேற்றார். ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதங்கள் தயாரிப்பதிலும், குறிப்பாக இஸ்ரேலிய டாங்குகளைத் தாக்கும் 'யாசின் 105' ராக்கெட்டுகளை உருவாக்குவதிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
பலமுறை இஸ்ரேலின் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியதால், ஹமாஸ் வட்டாரத்தில் 'தி கோஸ்ட்' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார் இசுதீன் அல் ஹதாத். இவரைப் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு இஸ்ரேல் 7.5 லட்சம் டாலர் வெகுமதி அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.