ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா வெறும் எட்டு பந்துகளை மட்டுமே வீசிய நிலையில், திடீரென ஏற்பட்ட காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறினார். இது டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் மீண்டும் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே நிகழ்ந்துள்ளது.
ரூ. 18 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு KKR அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட பதிரானா, இந்த சீசனில் தனது முதல் போட்டியில் விளையாடினார். பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடிய அவர், சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் களமிறங்கியுள்ளார். இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய பதிரானா, தனது முதல் ஓவரில் 7 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால், இரண்டாவது ஓவரின் முதல் பந்தை வீசும்போது திடீரென தொடைப்பகுதியில் அசௌகரியத்தை உணர்ந்து கீழே சரிந்தார். மருத்துவ உதவிக்கு பிறகும், முழு பலத்துடன் பந்துவீச முடியாததால், கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிடம் பேசிவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
முன்னதாக, டி20 உலகக் கோப்பை தொடரின் போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பதிரானா இதே போன்ற காயம் காரணமாக பாதியிலேயே விலகியிருந்தார். ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரது முழங்கால் காயம் தொடர்பான உடற்தகுதி சோதனைகளை கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவருடைய உடல்தகுதி மற்றும் பந்துவீச்சை காரணம் காட்டி சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பு விடுவித்த நிலையில், தற்போது அவர் 2 ஓவர் கூட வீச முடியாத நிலை ஏற்பட்டிருப்பது KKR அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.
KKR அணிக்கு இது ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா ஆகியோர் காயமடைந்து விலகியிருக்கும் நிலையில், வருண் சக்கரவர்த்தியும் காயமடைந்துள்ளார். பதிரானாவின் தொடர்ச்சியான காயங்கள் அவரது ஃபார்ம் மற்றும் அணியின் எதிர்காலம் குறித்த கவலையை அதிகரித்துள்ளன.