பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ₹3 உயர்த்தப்பட்டதற்கும், சி.என்.ஜி. எரிவாயு விலை கிலோவுக்கு ₹2 அதிகரிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம், சி.பி.ஐ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், சி.பி.ஐ.(எம்.எல்) விடுதலை மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டறிக்கையில், 'மோடி அரசு மக்களின் அன்றாட வாழ்வின் மீது தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் இது. இதை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன' என்று தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே மே 1 முதல் வணிக சிலிண்டர் விலை ₹2,244 லிருந்து ₹3,237 ஆக ₹993 உயர்த்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் நிலையும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, 'பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்' என்று சில நாட்களுக்கு முன்பு அறிவுரை வழங்கியதைச் சுட்டிக்காட்டிய தலைவர்கள், இந்த விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்களின் தன்னிச்சையான முடிவு அல்ல என்றும், மத்திய பா.ஜ.க. அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அறிவிப்பு என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். வாகனப் போக்குவரத்து செலவில் 55% டீசல் செலவு என்பதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு சரக்குகள், சேவைகள், காய்கறிகள், பழங்கள், பால், மருந்துகள் என அனைத்தின் விலையையும் கடுமையாக பாதிக்கும்.
பொருளாதார மதிப்பீடுகளின்படி, பெட்ரோல், டீசல் விலையில் 3% உயர்வு, சில்லறை பணவீக்கத்தில் குறைந்தபட்சம் 15% உயர்வுக்கு வழிவகுக்கும். இந்தச் சுமையை சாதாரண, நடுத்தர மக்கள்தான் சுமக்க நேரிடும். ஏற்கெனவே நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போரும், ஹோர்முஷ் நீரிணை நெருக்கடியும் காரணமாகக் கூறப்பட்டாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் விலையைக் குறைக்காமல், வரிகளை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பியதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விலை உயர்வு ஒரு பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல, நெருக்கடி காலங்களில் வருவாய் திரட்ட எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதி என்றும் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் செல்வக் குவிப்பிற்கு வழிவகுத்துள்ள நிலையில், அரசு தொடுக்கும் இத்தகைய பொருளாதாரப் போரால் மக்களின் அமைதி சீரழிக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் அத்தியாவசியமானவை என்பதால், மானியம் வழங்கி விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, மே 20 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்று ஆதரவு தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.