சென்னையில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அண்ணாசாலை மற்றும் அயனாவரம் பகுதிகளில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 39 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று, D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், அண்ணாசாலை, பார்டர் தோட்டம், களிமண்புரம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அமுலு என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், K-2 அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அயனாவரம், பழனி ஆண்டவர் கோயில் தெருவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஜோதிபாய் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.