சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு முக்கிய நீதிமன்ற வழக்கையும், கடவுள் நம்பிக்கையையும் மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.21 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தைப் பார்த்து வருகின்றனர்.
சூர்யாவின் இந்தப் படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, ‘கருப்பு’ படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது சூர்யா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது பதிவில், 'சூர்யா அண்ணாவின் தமிழில் (கருப்பு) மற்றும் தெலுங்கில் (வீரபத்ருடு) படங்களுக்குக் கிடைத்துவரும் இந்த அபரிமிதமான அன்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. இதைக் கேட்பதற்கே மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. இந்தச் செய்தி மிகவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திரையில் தனது முழு உழைப்பையும் கொடுத்து, அவர் நமக்குக் காட்டிவரும் அபாரமான திறமைக்காக… இறுதியாக, திரையரங்குகள் ஆரவாரத்துடனும் சத்தத்துடனும் இருக்கும்போது, அது நம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், தயவுசெய்து விடுமுறையை நன்றாகக் கழித்துக் கொள்ளுங்கள். மேலும், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜிக்கும், என் அன்புக்குரிய திரிஷாவுக்கும் வாழ்த்துகள்' என்று விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார்.