வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிக்க உள்ளதாக வெளியான ஊடக செய்தி முற்றிலும் வதந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த செய்திக்கு எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும், இது போன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'நமது மக்கள் வெளிநாடுகளில் எளிதாக வணிகம் செய்வதையும், வாழ்வதையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்றும் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஊடகத்தின் செய்தியை பிரதமர் அலுவலகம் அல்லது பிரதமர் நேரடியாக மறுப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தவும், தங்கம் வாங்குவதை தற்காலிகமாக ஒத்திவைக்கவும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு, எல்பிஜி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பயணத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.