உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணி, ஷான்மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இது, தங்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய வங்காளதேசத்தின் முதல் வெற்றியாகும்.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சைல்ஹெட் நகரில் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. கடந்த 2024-ல் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 2-0 என தொடரைக் கைப்பற்றிய வங்காளதேசம், இந்த முறையும் உள்ளூரில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம், முதல் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு, தொடரை சமன் செய்ய பாகிஸ்தான் அணி தீவிரமாக முயற்சிக்கும். இதனால், இந்தப் போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தால், பாகிஸ்தான் அணியின் போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அந்த அணிக்கு 8 புள்ளிகள் அபராதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், உலக சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.