தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், வரும் பொங்கல் தினத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், 3 எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகையை அரசே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் என்றும் அவர் கூறினார்.
வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் சிரமமான சூழலை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களின் வருவாய் அதிகம் செலவாகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிதி நெருக்கடியான சூழலிலும், பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிவாயுவிற்காக மக்கள் செலவு செய்த தொகையை திரும்ப அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, முதல் கட்டமாக 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். சிலிண்டர் வாங்குவதற்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எண்ணெய் நிறுவனங்களிடம் பட்டியல் பெற்றவுடன், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு குறு விவசாய குடும்பத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தேர்தல் வாக்குறுதியில் 6 சிலிண்டர்கள் இலவசம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனைகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதிக்கும் தற்போதைய அறிவிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
