ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தது பெரும் பேசுபொருளானது. ஆனால், தற்போது 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து, தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த குடும்பத்தின் மோசடி அம்பலமாகியுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு, வினாத்தாள் கசிந்துள்ளது. இந்த மாதிரி வினாத்தாளில், வேதியியலில் 45 கேள்விகளும், உயிரியலில் 90 கேள்விகளும் அப்படியே இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வினாத்தாள் கசிவு வழக்கில், தினேஷ் பிவால், அவரது சகோதரர் மாங்கி லால், மற்றும் மருமகன் விகாஸ் ஆகியோர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களே, அசல் வினாத்தாள்களை ராஜஸ்தானில் உள்ள பயிற்சி மையங்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாங்கிலாலின் மகன் சவாய், மகள் பிரகதி, தினேஷின் மகள் குஞ்சன், மற்றும் மாங்கி லாலின் சகோதரர்களின் மகள்களான கன்ஷியாம் பாலக், சோனியா ஆகியோர்தான் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள். இவர்களின் முந்தைய மதிப்பெண்கள் குறைவாக இருந்தும், 2025 இல் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 2025 நீட் தேர்விலும் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.