புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உரையாற்றினார். உலக ஆளுகை மற்றும் பலதரப்பு அமைப்புகளில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உட்பட அனைத்து அமைப்புகளிலும் உடனடியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால், ஐ.நா.வின் செயல்திறனும் நம்பகத்தன்மையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், ஐ.நா. சீர்திருத்தங்களுக்கான எழுத்துப்பூர்வமான விவாதங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச நிதி கட்டமைப்புகளிலும் அவசர சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம், பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளை மேலும் பொறுப்புள்ளவையாகவும், வலுவானவையாகவும், திறம்பட செயல்படக்கூடியவையாகவும் மாற்ற முடியும். அத்துடன், வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான நிதி உதவிகளைப் பெறுவதற்கான அணுகலை அதிகரிக்க வேண்டியதும் அவசியம்.
உலக வர்த்தக அமைப்பை, விதிகள் அடிப்படையிலான, நியாயமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக மாற்றுவதன் மூலம், சந்தை சாரா நடைமுறைகள், விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள், நிச்சயமற்ற சந்தை அணுகல் போன்ற சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 'நமது காலத்தின் செய்தி தெளிவாக உள்ளது: ஒத்துழைப்பு இன்றியமையாதது, உரையாடல் அவசியமானது, ஆனால் சீர்திருத்தங்களுக்கான காலம் கடந்துவிட்டது' என ஜெய்சங்கர் தனது உரையை நிறைவு செய்தார்.