மைய அரசின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டதற்கு, தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், 'ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 என உயர்த்தியுள்ளன. இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, பெட்ரோல் நிறுவனங்கள் விலையைக் குறைப்பதில்லை. மாறாக, லாபத்தை மட்டும் அள்ளுகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இருசக்கர வாகனங்கள், சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தை இந்த விலை உயர்வு கடுமையாக பாதிக்கும். மேலும், வங்கிக் கடன் பெற்று வாகனங்களை இயக்கும் வாடகை ஓட்டுநர்களும் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாகி, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, வாடகை வாகனங்களின் கட்டணத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது அன்றாடப் பொருட்களின் விலையையும் உயர்த்தி, ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனை மேலும் பாதிக்கும்' என்று முதல்வர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.