உலகப் புகழ் பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடக்கும் இந்த திருவிழா, இந்த முறை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சித்திரை கடைசி நாள் தேரோட்டத்துடன் தொடங்கி, வைகாசி முதல் நாள் அம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று நடந்த தேரோட்டத்தில் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று காலை நடந்த அம்மன் சிரசு ஊர்வலம், அதிகாலை 4.45 மணியளவில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தொடங்கியது. நீலிகோவிந்த செட்டி தெரு, காந்தி ரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக சுமார் நான்கரை மணி நேரம் மிதந்து, காலை 9.15 மணியளவில் கோவிலை அடைந்தது.
ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும், பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பல இடங்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். வீடுகள், மாடிகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அம்மன் சிரசு ஊர்வலம் வரும்போது, வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மாடிகளில் இருந்தும் பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வழிபட்டனர்.
கோவிலை அடைந்ததும், அம்மன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் சிரசு பொருத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிரசு ஊர்வலம் மற்றும் கோவில் தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், அன்னதானம், குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக, இஸ்லாமிய சகோதரர்களும் தண்ணீர் பந்தல் அமைத்து, குளிர்பானங்கள், மோர் மற்றும் அன்னதானம் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.