நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் போர்கள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறி வந்தாலும், இது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக சாமானிய மக்களின் வயிற்றில் அடிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கை என வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் எரிபொருள் விலையை, கார்ப்பரேட் லாபத்திற்காகப் பயன்படுத்துவது அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்த விலை உயர்வு, வெறும் பெட்ரோல் பங்கோடு நின்றுவிடவில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை பல மடங்கு அதிகரித்துள்ளது. டீசல் மூலம் இயங்கும் இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலை மின் உற்பத்தி கருவிகளின் செலவு அதிகரிப்பதால், சிறு வணிகர்கள் தங்கள் தொழிலை நடத்த முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வேலையில்லாத் திண்டாட்டமும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.
நாட்டின் ரத்த நாளங்களாக விளங்கும் லாரி உள்ளிட்ட சுமையுந்து போக்குவரத்துத் துறை, டீசல் விலை ஏற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வாடகை உயர்வு, உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் லாரி உரிமையாளர்கள் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆட்டோ, வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் அன்றாடப் பயணங்களை நம்பியுள்ள சாமானிய மக்களின் போக்குவரத்துச் செலவு இருமடங்காக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களின் அத்தியாவசியப் பயணங்களையும் பெரும் சுமையாக மாற்றியுள்ளது.
டீசல் விலை உயரும்போது, விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, அரிசி, பருப்பு, எண்ணெய் முதல் காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏழை மக்களின் கைக்கெட்டாத உயரத்திற்குச் செல்கிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நடுத்தரக் குடும்பங்கள், இந்தச் சங்கிலித் தொடர் விலையேற்றத்தால் தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
140 கோடி மக்களை உலகச் சந்தையின் அதிர்வுகளுக்குப் பலிகொடுத்துவிட்டு, நீண்டகால எரிபொருள் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கத் தவறியது பாஜக அரசின் மிகப்பெரிய தோல்வி என வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தற்சார்புப் பொருளாதாரம் என்று பேசும் இவர்கள், மக்களை அந்நியச் சந்தைக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறிய இந்த அரசின் முகத்திரையை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மக்களின் வியர்வையைச் சுரண்டி, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிப்பது அரசின் வேலையாக இருக்கக் கூடாது. தொழில்துறையையும், ஏழை எளிய மக்களின் வாழ்வையும் சீரழிக்கும் இந்த எரிபொருள் விலை உயர்வை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.