ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலையில் 2 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளன. இந்த விலை உயர்வு, வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதி இழப்பு ஆகியவற்றால் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இருப்பினும், இந்த விலை உயர்வு சாதாரண மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கும். பொதுப் போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து, மக்களின் பொருளாதாரச் சுமையை அதிகரிக்கும்.
எனவே, இந்த விலை உயர்வின் தாக்கத்தை உணர்ந்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த தனது கருத்தை அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.