மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் இலவம் பஞ்சு தோட்டங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகளைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
மேகமலை விவகாரத்தில் எந்தவிதமான சலுகையும் காட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு, 'மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், துணை ராணுவத்தைப் பயன்படுத்த நேரிடும்' என்று கடுமையாகக் கூறியது. குறிப்பாக, மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ள அந்த நிலங்கள் முழுமையாக அரசுடமையாக்கப்பட வேண்டும் என்றும், இந்தத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக வருபவர்களே மேகமலையில் குடியேறி ஆக்கிரமிப்பு செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
நிலங்களை ஆக்கிரமித்துள்ள யாராக இருந்தாலும், அவர்களுக்கான கட்டிடங்களுக்கான மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கெடு விதித்துள்ளது. இந்த உத்தரவுகள் மேகமலை வனப்பகுதியின் பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த அதிரடி உத்தரவு, வனப்பகுதிகளின் ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதில் நீதிமன்றங்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. மேகமலை புலிகள் சரணாலயத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் இது ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
