MDTV 24×7 வழங்கும் சிறப்பு செய்தி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 21-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும். நேற்று (14-05-2026) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (15-05-2026) அதே பகுதிகளில் நீடிக்கிறது. இதன் காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்திலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதேபோல், 16-ஆம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும். 17-ஆம் தேதி திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. 18, 19, 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்.