இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அழைப்பைத் தொடர்ந்து, அவரும் தனது வாகன அணிவகுப்பில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துள்ளார்.
இந்தச் சூழலில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டப்பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் வருகை தந்து அனைவரையும் கவர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'எரிபொருள் சிக்கனம் குறித்த பிரதமரின் அழைப்பு சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களின் கான்வாய் அணிவகுப்பையும் குறைத்துள்ளோம். அடுத்த 6 மாதங்களுக்கு அரசு எந்தவிதமான பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்தாது' என்று தெரிவித்தார்.
இதேபோன்ற ஒரு சிக்கன நடவடிக்கையை டெல்லி அரசும் அறிவித்துள்ளது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மந்திரிகள், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், டெல்லி அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறையினருக்கும் ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில், தேவைக்கேற்ப குறைந்தபட்ச வாகனங்களைப் பயன்படுத்தவும், பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள், எரிபொருள் இறக்குமதியைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. தனிநபர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரும் சிக்கனத்தைப் பின்பற்றுவது அவசியமாகிறது.