சென்னையில் பரபரப்பு சம்பவம்! கந்தன்சாவடியில் உள்ள தனியார் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிந்தாமணி என்பவர், சென்னையில் பணிபுரியும் தனது சகோதரியைச் சந்திக்க வந்துள்ளார். கடந்த 10-ஆம் தேதி இரவு, சகோதரியுடன் விடுதியில் தங்கியிருந்தபோது, அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் விடுதியின் சுவரில் ஏறி குதித்து அறைக்குள் நுழைந்துள்ளார்.
திடீரென அறைக்குள் புகுந்த ஆண் நபரைக் கண்டு சிந்தாமணி அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு மற்ற பெண்களும் எழுந்துள்ளனர். அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவைச் சேர்ந்த லட்சுமணன் (27 வயது) என்பவரைக் கைது செய்துள்ளனர். இவர் கொட்டிவாக்கம் பகுதியில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
மேலும், பெண்களிடம் தொந்தரவு செய்தது தொடர்பாக லட்சுமணன் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட லட்சுமணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.