தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு மற்றும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தனது உரையில், திமுக ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மற்றும் மணி மண்டபங்கள் அமைத்துத் தந்ததாக எ.வ.வேலு குறிப்பிட்டார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரியாரை கொள்கை தலைவர் என த.வெ.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாக குற்றம்சாட்டிய எ.வ.வேலு, கோவையில் கடந்த 3 மாதங்களாக பெரியார் நூலகம் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தை கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, பெரியார் பெயரை த.வெ.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாக எ.வ.வேலு கூறுவது தவறு என்றும், அறிவாலயத்தில் இன்னும் பெரியார் சிலை நிறுவப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், த.வெ.க. கட்சி அலுவலகத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன என்றும் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
'முதலமைச்சர்' என்பது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல என்றும், அது ஒரு பொதுவான சொற்சொடர் என்றும் எ.வ.வேலு விளக்கினார். ஆகையால் தான் 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' என்று பெயர் வைத்ததாகவும், ஆனால் தற்போது அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது ஏன் என்றும் அவர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த விவாதம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து காரசாரமாக விவாதித்தனர்.
