இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ இடங்களை நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அதன் தொடர்ச்சியான சிக்கல்கள் குறித்து விரிவாக விளக்கி, ஸ்டாலின் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் என கடந்த காலங்களில் நீட் தேர்வு பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. 2024 நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள், ஒரே மையத்தில் பல மாணவர்கள் தேர்ச்சி, தேர்வு வினாத்தாள் கசிவு என பல புகார்கள் எழுந்தன. இதன் விளைவாக, 155க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த முறைகேடுகளால் பயனடைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. மேலும், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது, போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நீட் தேர்வு, ஏழை, கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் தடையாக இருப்பதாகவும், பணம் படைத்தவர்களுக்கும், பயிற்சி மையங்களுக்கே இது சாதகமாக இருப்பதாகவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பயிற்சி மையத் தொழிலில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் புரள்வதாகவும், சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு மாறாக, தமிழ்நாட்டின் முந்தைய பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்கியதாகவும், அதுவே தமிழ்நாட்டின் வலுவான பொது சுகாதார அமைப்புக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தால் நீட் விலக்கு சட்ட மசோதா இருமுறை நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும், இதுவரை ஒப்புதல் கிடைக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவைத் திருத்தி, அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி அவசரச் சட்டம் பிறப்பித்து, 2026-27 கல்வியாண்டுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.