நாடு முழுவதும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
புதிய விலைகளின்படி, நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.14 காசுகளும், டீசல் விலை ரூ.3.11 காசுகளும் அதிகரித்துள்ளன. இந்த திடீர் விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும், குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த கோரிக்கை, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.