சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார். முதல்வரின் உத்தரவின் பேரில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கம் தொகுதியில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
பூஜ்ஜிய ஊழல், பூஜ்ஜிய கமிஷன் என்ற இலக்குடன் செயல்படுவோம் என்றும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் CCTV கேமராக்கள் இயங்க வேண்டும் என்றும், புகார் அளிப்பவர்களின் வாக்குமூலங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு நிலங்களை அளவிடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களைத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் டெண்டர் பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும், யாரையும் பரிந்துரைக்கக் கூடாது என்றும் முதல்வர் விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார். டெண்டர் எடுப்பவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சினை குறித்தும் அமைச்சர் பேசினார். மின்வெட்டு குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்களின் உயிரே தங்களுக்கு முக்கியம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். அரசு ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும், அவர்கள் தவெகவுக்கு அதிகம் வாக்களித்திருப்பதால், அவர்களுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகள் முதல்வர் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.