தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சினிமா துறையின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு அவரது ஆட்சி ஒரு விடிவுகாலமாக அமையும் என இயக்குநர் பேரரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில் உருவான ‘சைலண்ட் இன்புளூயன்சர்’ இசை ஆல்பத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பேரரசு, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா, கருணாநிதி போல, நமது திரையுலகக் குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வராகி இருப்பது சினிமா துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். விஜய்யின் முதல்வர் பதவி ஏற்கிற இந்த தருணத்தில், சினிமா துறையினர் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
தற்போது சினிமாவில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. திரையரங்குகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் என பல பிரச்சனைகளை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இந்தப் பிரச்சனைகளுக்கு விஜய்யின் ஆட்சி ஒரு தீர்வைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என அனைவரும் சுதந்திரத்துடனும், நலனுடனும் செயல்பட ஒரு சுதந்திரமான சூழல் வேண்டும்.
மேலும், ஆண்டுக்கான மாநில விருதுகள் அடுத்த ஆண்டே வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உதாரணமாக, 2026-ஆம் ஆண்டிற்கான விருதுகளை 2027-ஆம் ஆண்டிலேயே வழங்கிவிட வேண்டும். தாமதமாக விருதுகள் வழங்கப்படுவதால், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெறும் குழந்தைகள், தாங்களாகவே குழந்தைகளுடன் விருது வாங்க வரும் அவல நிலை ஏற்படுகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோர் சினிமா துறையின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைத்தனர். அதேபோல, விஜய்யும் நமது சினிமா துறையை தனது குடும்பமாக நினைத்து, பிரச்சனைகளை உடனடியாகக் கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும். நீங்கள் சினிமாவை கைவிடமாட்டீர்கள், மக்களும் உங்களை கைவிடமாட்டார்கள்" என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.