சென்னை: 'சைலன்ட் இன்புளூயன்சர்' இசை ஆல்பம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பேரரசு, தமிழ் சினிமாவின் தற்போதைய பிரச்சனைகளுக்கு நடிகர் விஜய் தலைமையிலான அரசு ஒரு தீர்வைக் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய பேரரசு, 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில், திரையுலகிலிருந்து ஒருவர் தமிழக முதல்வராகி இருப்பது சினிமா துறைக்கு பெருமை சேர்க்கும் விஷயம். அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்கள்தான். விஜய்யின் முதலமைச்சர் பதவி, எங்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது' என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 'இன்று சினிமாவில் பல பிரச்சனைகள் நிலவுகின்றன. திரையரங்குகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, புதிய படங்களை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் எனப் பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் விஜய்யின் ஆட்சி ஒரு விடிவுகாலமாக அமைய வேண்டும். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சுதந்திரத்துடனும், வளமாகவும் வாழ ஒரு நல்ல சூழல் உருவாகும் என நம்புகிறோம்' என்றார்.
மேலும், மாநில விருதுகள் குறித்த தனது கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். 'இந்த ஆண்டுக்கான மாநில விருதுகளை அடுத்த ஆண்டே வழங்க வேண்டும். 2026 விருதுகளை 2027-ல் வழங்கினால் கூட பரவாயில்லை. தாமதமாக விருதுகள் வழங்கப்படுவதால், குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகின்றனர். எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் சினிமாவை தங்கள் குடும்பமாக நினைத்து பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தனர். அதேபோல், விஜய்யும் சினிமாவின் பிரச்சனைகளை உடனடியாகக் கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவும் மக்களும் உங்களை கைவிட மாட்டார்கள்' என்று பேரரசு கேட்டுக்கொண்டார்.