இந்திய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர் இடம்பெறும் நடைமுறை முன்னர் இருந்தது. ஆனால், பாஜக அரசு, உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக ஒரு மத்திய அமைச்சரை சேர்த்தது. இந்த மாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி தீபங்கர் தத்தா, 'சிபிஐ இயக்குநர் தேர்வு குழுவில் தலைமை நீதிபதி இடம்பெறுகிறார். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தூய்மையான தேர்தலை உறுதி செய்யவும் வேண்டாமா?' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், 'தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், ஒரு தனிப்பட்ட சுதந்திரமான நபர் ஏன் இடம்பெறக்கூடாது? அமைச்சகத்தில் இருந்து ஒருவர் இடம்பெறுவது ஏன்? தற்போது பிரதமர் ஒருவரை தேர்வு செய்கிறார், எதிர்க்கட்சி தலைவர் மற்றொருவரை தேர்வு செய்கிறார். இதில் முரண்பாடு ஏற்பட்டால், மூன்றாவது நபராக இருக்கும் அமைச்சர், எதிர்க்கட்சி தலைவரின் முடிவை நோக்கி செல்வாரா?' என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், 'நடைமுறை ரீதியாக அவ்வாறு இருக்காது. அதை நான் யூகித்து கூற விரும்பவில்லை' என்றார். அதற்கு நீதிபதி தத்தா, 'அப்படியானால், அனைத்தையும் நிர்வாகத் துறையே கட்டுப்படுத்துகிறது' என்று உடனடியாக பதிலளித்தார். இத்தகைய நியமனங்களில், அமைச்சரவை அமைச்சர் பிரதமரின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட வாய்ப்பில்லை என்பதால், முடிவுகள் நடைமுறையில் 2:1 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.