உத்தரப் பிரதேசத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் 89 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்துள்ள நிலையில், 114 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. பரேலி, பிரயாக்ராஜ், பதோஹி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த இயற்கைச் சீற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புயல் மற்றும் கனமழையின் போது, மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததில் ஏராளமான வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. புழுதிப் புயல் காரணமாக பார்வைத் திறன் குறைந்து, விளம்பரப் பலகைகளும், தகரக் கூரைகளும் பறந்தன. வாகனங்களும், வீடுகளும் சேதமடைந்ததோடு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பாதிப்புகளை உணர்வுப்பூர்வமாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து, 24 மணி நேரத்துக்குள் நிதி உதவி அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மண்டல ஆணையர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சூறைக்காற்று, கனமழை, மின்னல் பாதிப்புகள் குறித்த தகவல்களை ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் ஒருமுறை அனுப்புமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்குத் தெரியப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட அதிகாரிகளுடன் நேரடி ஒருங்கிணைப்பு மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு, தேவையான நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.