டெல்லியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையை அமல்படுத்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த முக்கிய கோரிக்கையைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் 'எனது இந்தியா, எனது பங்களிப்பு' என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்களுக்கான அலுவல் கூட்டங்களில் 50 சதவீதம் இனி இணையவழியில் (ஆன்லைன்) நடத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணச் செலவுகளைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மூலம் அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, ஐடி நிறுவனங்கள், பெருநிறுவன அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க முடியும்.
அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீட்டில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள்கிழமைகளில் அமைச்சர்களின் அதிகாரிகள் பயணங்களுக்கு மெட்ரோ ரயிலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும்.