திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட அ.தி.மு.க-வில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாபெரும் நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட அ.தி.மு.க-வில் மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மாணவர் அணி நிர்வாகிகள், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, இலக்கிய அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிந்தாமணி, மலைக்கோட்டை வடக்கு, தெற்கு, காந்தி மார்க்கெட், கருமண்டம், காஜாமலை, பொன்னகர், பாலக்கரை, வடக்கு, தெற்கு, எடத்தெரு வடக்கு, தெற்கு, உறையூர் வடக்கு, தெற்கு, தில்லைநகர் பகுதி, அண்ணா நகர் பகுதி, புத்தூர் பகுதி, சண்முக நகர் பகுதிகள் மற்றும் புதிதாக வட்ட நிர்வாகிகள் என சுமார் 500 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க-வில் இருந்து நிர்வாகிகள் பலர் த.வெ.க கட்சிக்கு சென்றிருந்தனர். அவர்களுக்கு மாற்றாக, புதிய நிர்வாகிகளை நியமிப்பதன் மூலம் அ.தி.மு.க-வின் நிர்வாகிகளுக்குள் புதிய உத்வேகம் பாய்ச்சப்பட்டுள்ளது. இந்த புதிய நியமனங்கள் மூலம் திருச்சி மாநகரில் அ.தி.மு.க-வினர் புதிய பொலிவுடனும், பலத்துடனும் செயல்பட தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த நியமனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அதிக அளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நியமனங்கள் மூலம் அ.தி.மு.க-வின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி, கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
வரும் காலங்களில் இந்த புதிய நிர்வாகிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, கட்சியின் வளர்ச்சிக்காகவும், திருச்சி கிழக்கு தொகுதி இடைத் தேர்தலிலும் வெற்றி பெற பாடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-வின் எதிர்கால செயல்பாடுகளுக்கு இந்த நியமனங்கள் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
