வேலூரில் நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபர், அவரை காரில் ஏற்ற முயன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (34), அவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 13 வருட திருமண வாழ்வில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல், புதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26), 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து, தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வரும் அஜித்குமாரும், ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று, ஜெயக்குமார் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த அஜித்குமார் திடீரென மொபட் மீது காரை ஏற்ற முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றது. அப்போது, 'உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்' என அஜித்குமார் மிரட்டியதாக ஜெயக்குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் மற்றும் அஜித்குமார் நெருங்கிய நண்பர்கள் என்றும், அடிக்கடி அஜித்குமார் ஜெயக்குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஜெயக்குமாரின் மனைவி சிவரஞ்சனிக்கும் அஜித்குமாருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் ஜெயக்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருப்பினும், சிவரஞ்சனியும் அஜித்குமாரும் மீண்டும் பழகி கள்ளக்காதலை வளர்த்ததுடன், அஜித்குமார் சிவரஞ்சனியுடன் இருந்த தகாத உறவை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார், சிவரஞ்சனியிடம் விவாகரத்து கேட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஜெயக்குமாரை காரில் ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.