பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களை வெறிநாய்க்கடி நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 'வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை'யை உருவாக்கும் மாபெரும் சிறப்பு முகாம் இன்று (11.08.2026) முதல் தொடங்குகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் இந்த மாபெரும் திட்டம், நாய்கள் வசிக்கும் தெருக்களுக்கே சென்று செயல்படுத்தப்பட உள்ளது.
மண்டல வாரியாக, கோட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள நாய் பிடிக்கும் பணியாளர்கள், வலைகளைப் பயன்படுத்தி தெரு நாய்களைப் பிடித்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் அவற்றுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்துவார்கள். பின்னர், நாய்களுக்கு வண்ண சாயம் தெளித்து அடையாளப்படுத்தி, அவை மீண்டும் அவை வசித்த இடங்களிலேயே விடுவிக்கப்படும். இந்த சிறப்பு முகாம்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த மாபெரும் திட்டத்திற்காக, நாள் ஒன்றுக்கு சுமார் 100 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒரு நாளைக்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 மண்டலங்களில் தலா 10 குழுக்கள் வீதம் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
மேலும், வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களும் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, இலவசமாக ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது செல்லப்பிராணிகளின் நலனையும் உறுதி செய்யும்.
கடந்த ஆண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,47,545 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு, மண்டலம் 1ல் 14 நாட்களும், மண்டலம் 2ல் 9 நாட்களும், மண்டலம் 4ல் 14 நாட்களும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இம்முகாம் விரிவுபடுத்தப்பட்டு, 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும், ஒட்டுண்ணி நீக்கும் ஊசியும் அளிக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 'வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை' என்ற இலக்கை அடைய, பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும், விலங்கு நல ஆர்வலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இணை ஆணையர் (சுகாதாரம்), தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை கால்நடை மருத்துவ அலுவலர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாம் தொய்வின்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
