சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு தரப்பு மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான மற்றொரு தரப்பு எனப் பிரிவினை மேலும் வலுத்துள்ளது.
சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதே சமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக அரசுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சபாநாயகரிடம் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. விஜயபாஸ்கர், 'எஸ்.பி. வேலுமணி தலைமையில் பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், எஸ்.பி. வேலுமணி சட்டமன்றக் குழுத் தலைவராகவும், நான் கொறடாவாகவும் எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டோம். நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என உரிய விதிகளின்படி நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். அதில், 25 எம்.எல்.ஏ.க்கள் கொறடாவின் உத்தரவை ஏற்று செயல்பட்டனர். ஆனால், 22 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக கொறடாவின் உத்தரவை நிராகரித்துள்ளனர். எனவே, பேரவைத் தலைவர் எங்களைச் சந்தித்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி இந்த 22 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்.
பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பதே சட்ட விதி. சட்டமன்றக் கட்சி என்பதே செல்லும் என்பதை நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. பெரும்பான்மையே இறுதியானது. தலைவர் அவர்கள் உரிய விதிகளின்படி நல்லதொரு முடிவை எடுப்பார்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.