டெல்லியில் ஒரு திருமணமான பெண்ணுக்கு பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான அப்பெண், வேலை முடிந்து வீடு திரும்பும்போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு, புதுடெல்லியின் பிதாம்புரா பகுதியைச் சேர்ந்த அப்பெண், மங்கோல்புரி தொழிற்சாலையில் தனது வேலையை முடித்துவிட்டு ராணி பாக் பகுதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்லீப்பர் கோச் பேருந்தின் அருகே நின்றிருந்த அவரிடம், பேருந்தின் அருகே நின்ற நபர் ஒருவர் நேரத்தைக் கேட்டுள்ளார். திடீரென, அவரை வலுக்கட்டாயமாக பேருந்துக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். பேருந்தை நங்லோய் பகுதியை நோக்கி ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், 'பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் பணியாளர்களே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் கொடூர நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளது.